Published : 28 May 2015 05:07 PM
Last Updated : 28 May 2015 05:07 PM

சேலம்: எச்ஐவி பாதித்தவர்களின் வாரிசுகள் 93 பேருக்கு இலவச உயர் கல்வி

சேலம் மாவட்டத்தில் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் மற்றும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள வாரிசுகள் 93 பேர் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இலவச உயர்கல்வி சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும், பாதிப்பு உள்ளாக வாய்ப்புள்ள குழந்தைகளின் உயர்கல்விக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு இலவச உயர்கல்வி அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு உயர்கல்விக்கு 93 விண்ணப்பங்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலுவலகம் மூலம் பெறப் பட்டுள்ளது. இவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும், 17 தனியார் கல்லூரிகளில் 93 இடங்கள் பதிவாளர் அங்கமுத்து முன்னிலையில் ஒதுக்கப் பட்டது.

இதுகுறித்து பதிவாளர் அங்கமுத்து கூறியதாவது:

கடந்த 5 ஆண்டாக எச்.ஐ.வி.,யால் பாதிக்கப் பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளா வதற்கான வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 214 மாணவர்கள் இலவச உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் க.மகர பூஷணம் கல்லூரி சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சு.செல்வம் மற்றும் சேலம் மாவட்ட எச்.ஐ.வி., கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x