Published : 19 May 2014 01:04 PM
Last Updated : 19 May 2014 01:04 PM

சைக்கிளில் தேசம் சுற்றும் தேசபக்தி தம்பதி

குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரங்களை நாமெல்லாம் பத்திரிகைகளிலும் டி.வி.க்களிலும் பார்த்துதான் நாம் அறிந்தி ருக்கிறோம். ஆனால், கருப்பையா - சித்ரா தம்பதி, அந்தக் களத்தில் இருந்து கலவரத்தின் வலியை உணர்ந்தவர்கள்.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. மதநல்லிணக்கம். பூரண மதுவிலக்கு, எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து இதுவரை 8 முறை தேசம் முழுக்க சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் சென்றவர். 1992-லிருந்து இதுவரை இவர் சைக்கிளில் பயணம் செய்திருக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? 67,500 கிலோ மீட்டர்.

தனது பயணம் குறித்து கருப்பையா கூறுகிறார்..

காந்திய சிந்தனைகளில் டிப்ளமோ படிப்பு முடித்திருக் கிறேன். சிறுவயதிலிருந்தே எனக்கு நாட்டுப்பற்று அதிகம். நம் முன்னோர்கள் 200 ஆண்டுகள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதை நல்ல முறையில் போற்றிப் பாதுகாக்க வலியுறுத்தியே தேசம் தழுவிய சைக்கிள் பயணம் சென்று கொண்டிருக்கிறேன்.

சித்ராவும் நானும் 2000-ம் ஆண்டில் மறுமணம் செய்துகொண்டோம். அவரும் என்னைப் போலவே தேசநலன் மீது அக்கறை கொண்டவர். அதனால், திருமணத்துக்குப் பிறகு சித்ராவும் என்னோடு சைக்கிள் பயணத்தில் கலந்துகொண்டார். ஒரே சைக்கிளில்தான் எங்களது பயணம்.

2002-ல் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது மகேஸ்வரி என்ற பெண் போலீஸ் பலியானார். அப்போது, எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் குஜராத்தை அடைந்தபோது, அங்கே கோத்ரா கலவரம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அந்தக் கலவரங்களை கண்கூடாக பார்த்து மிரண்டு போனோம். போலீஸ் தடுத்ததால் குஜராத்துடன் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிட்டோம்.

கோத்ரா கலவரங்களை மறக்க முடியாததால் மத நல்லிணக் கத்தை வலியுறுத்தி மீண்டும் விருதுநகரிலி ருந்து டெல்லி நோக்கி எங்களது அடுத்த பயணத்தைத் தொடங்கினோம். 2002-ல் தண்டி யாத்திரை பவளவிழா கொண்டாடப்பட்டது. அப்போது காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிவரை நடந்த யாத்திரையில் நாங்களும் கலந்துகொண்டோம். இதற்காக பிரதமர் விருதும் கொடுத்தனர்.

எங்களது நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டவர்கள் சில இடங்களில் நல்ல முறையில் உபசரித்து உதவிகளை செய்வார்கள். மற்றபடி, நாங்களாக யாரிடமும் போய் எந்த உதவியும் கேட்பதில்லை. வழிநெடுகிலும் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போம்.

எங்களது தேசப்பற்றை பாராட்டி, வாடிப்பட்டி அரிமா சங்கத்தினர் சொந்தமாக மளிகைக் கடை ஒன்றை வைத்துக் கொடுத்தனர். அந்த வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறோம். மதுரை - வாஹா சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது சித்ராவுக்கு விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் போய்விட்டது. அதேபோல், எனக்கும் ஒரு விபத்தில் பலமாக அடிபட்டுவிட்டது. இனிமேல் எங்களால் சைக்கிள் மிதிக்க முடியாது. அதனால் டூ-வீலர் அல்லது வேறு ஏதாவது வாகனத்தில் பயணத்தை தொடரலாம் என்றிருக்கிறோம். சமூக ஆர்வலர்கள் யாராவது உதவி செய்தால் இறுதி மூச்சுவரை எங்களது பயணம் தொடரும்.

தீர்க்கமாக பேசினார் கருப்பையா.

‘‘சாதி, மத பேதங்களைக் கடந்து இந்திய மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் ஆசை. ஆனால், இப்போது நடக்கும் சாதி, மத அரசியலைப் பார்த்தால் தேசத்தின் மீதான கவலை இன்னும் அதிகரிக்கிறது’’ என்கிறார் சித்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x