Published : 29 May 2015 08:56 AM
Last Updated : 29 May 2015 08:56 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 35,367 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. 2015-16-ம் கல்வி யாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் அனைத்து கல்லூரிகளிலும் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மாலை 5 மணி வரை 35,367 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

நேற்று மட்டும் 314 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட 24 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ “செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010” என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x