Published : 26 May 2015 07:54 AM
Last Updated : 26 May 2015 07:54 AM

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளிகள் குடும்பத்தாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

திருப்பதி அருகே சுட்டுக் கொல்லப் பட்ட 20 தமிழக கூலித் தொழி லாளர்களின் குடும்பத்தாரிடம் ஆந்திர அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர சிறப்பு போலீஸார், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். அவர்களது உடலில் தீக்காயம் மற்றும் வெட்டுக் காயம் இருந்ததால் சிபிஐ விசாரணை கேட்டு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஆந்திர சிறப்பு போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 20 பேரை சுட்டுக் கொன்றது குறித்து ஐபிஎஸ் அதி காரி ரவிசங்கர் அய்யனார் ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய் வுக் குழுவை ஆந்திர அரசு அமைத்தது. அந்தக் குழு நேற்று விசாரணையை தொடங் கியது. அக்குழுவை சேர்ந்த 21 பேர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள், கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில், கொல்லப்பட்ட பழனி குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கினர்.

பின்னர், முருகாப்பாடி கிராமம் மூர்த்தி, முனுசாமி, வேட்டகிரிபாளையம் கிராமம் பெருமாள், சசிகுமார், முருகன், காந்தி நகர் கிராமம் மகேந்திரன் குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து அவர்கள் சென்ற தேதி மற்றும் நேரம், அவர்கள் செய்து வந்த தொழில், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கேட்டுள்ளனர். இதேபோல், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேர் குடும்பத்தாரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த 12 மற்றும் 13-ம் தேதி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x