Published : 25 May 2015 10:55 AM
Last Updated : 25 May 2015 10:55 AM

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி

அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களின் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையருக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு சிறப்பு தொழில்நுட்ப பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2015-16-ம் கல்வி ஆண்டுக்கு பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

பதவி உயர்வுக்காக எம்இ, பிஎச்டி படிக்கும் நோக்கில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு ஆசிரியர்கள் மாறுதல் கோரும்பட்சத்தில் இந்த இடங்களில் ஏற்கெனவே பணிபுரியும் மூத்த ஆசிரியர்களை இடமாற்றலாம் என்ற வழிகாட்டு நெறிமுறையை தவிர்த்து 2014-15-ம் ஆண்டின் மற்ற நெறிமுறைகளை பின்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாற்றம் வழங்குவதற்கான கலந்துரையாடல் வருகிற 28-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் தொழில்நுட்ப கல்வித்துறை தகவல் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x