Published : 25 May 2015 10:42 AM
Last Updated : 25 May 2015 10:42 AM

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தலைமை ஆசிரியை உடல் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சென்னை வேளச்சேரி அடுத்த மேடவாக்கம் கங்கா நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் கே.ஜீவரத்தினம் (55). சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் இறந்துவிட்டார். மகள் சொர்ணா மற்றும் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிறுசேரியில் சொர்ணா வசித்து வந்தார். கடந்த 17-ம் தேதி இரவு 8 மணி அளவில் மகள் சொர்ணா ஸ்கூட்டியில் ஜீவரத்தினத்தை ஏற்றிக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டார்.

மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பைக்கை சொர்ணா மெதுவாக ஓட்டிச் சென்றார். சோழிங்கநல்லூர் முகமது சதக் கல்லூரி அருகே இருந்த வேகத்தடை மீது ஸ்கூட்டி ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய ஜீவரத்தினம் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜீவரத்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இந்த தகவலை உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மகள் சொர்ணா உள்ளிட்ட அனைத்து உறவினர்களும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து ஜீவரத்தினத்தின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர். வயது முதிர்வு காரணத்தால் நுரையீரலை டாக்டர்கள் எடுக்கவில்லை.

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும், இதயம் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு இரண்டு கண்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் தேவையான நோயாளிகளுக்கு கண்களை பொருத்த உள்ளனர். மூளைச்சாவு அடைந்த பள்ளி தலைமை ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x