Published : 28 May 2015 07:55 AM
Last Updated : 28 May 2015 07:55 AM

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் சூரியசக்தி மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி

பயணிகள் சேவையை மேம்படுத்தவும், ரயில்வேயின் சாதனைகளை விளக்கவும் இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த முகாம், ஜூன் 9-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே வாரிய உறுப்பினர் நவீன் தண்டன், நேற்று காலை 10.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தார். நடைமேடைகளில் நடக்கும் தூய்மைப் பணிகள், ரயில் பெட்டிகள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் குறித்து ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினேன். 2-ம் வகுப்பு ரயில் பெட்டிகளில் கதவு அருகில் மட்டுமே செல்போன் சார்ஜருக்கான வசதி இருந்தது. இப்போது, ஒவ்வொரு பெட்டியிலும் 18 இடங்களில் சார்ஜர் போடும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தேன்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடம் பாரம்பரிய கட்டிடம் என்பதால், தொடர்ந்து தேவையான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 17 ஆயிரம் ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் இந்த வசதி கொண்டுவரப்படும்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் குறைவான மின்சாரம் பயன் படுத்தும் வகையில் எல்இடி விளக்குகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். ரயில்களை இயக்கவும், ரயில் நிலையங்களுக்கு பயன்படுத்தும் வகை யிலும் சோலார் பேனல்கள் அமைத்து சூரியசக்தி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரமும், 168 மெகாவாட் காற்றாலை மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். பேசின்பிரிட்ஜ் சென்னை சென்ட்ரல் இடையே 5, 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அவர் கூறினார். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால் (பொறுப்பு), சென்னை கோட்ட மேலாளர் அனுபம்சர்மா உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x