Published : 31 May 2015 10:05 AM
Last Updated : 31 May 2015 10:05 AM

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகத்துக்கு 2-வது இடம்: கூடுதல் தலைமைச் செயலர் தகவல்

நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக கடந்த 2-ம் தேதி தொடங்கிய கோடை விழா, நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற கோடை விழாவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று, கண்டுகளித்த நிலையில் கோடை விழா நேற்று நிறைவு பெற்றது. இந்த கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் பங்கேற்று விழாவை சிறப்பித்தார். கோடை விழாவில் அரங்கு அமைத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர் பேசிய தாவது:

ஆண்டுதோறும் தமிழகத்துக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில், நீலகிரி மாவட்டத்துக்கு மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் முதலிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2-ம் இடமும் தமிழகம் வகிக்கிறது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்தியா வுக்குள் நுழைவதால், முக்கிய முனையமாக மும்பை விமான நிலையம் விளங்குகிறது.

இதே போல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சென்னை விமான நிலையம் மேம்படுத்தப் பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக ரூ.2.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சி.கோபால கிருஷ்ணன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x