Published : 12 May 2014 09:40 AM
Last Updated : 12 May 2014 09:40 AM

அரக்கோணத்தில் சிக்கியவர்கள் ‘ரைஸ் புல்லிங்’ மோசடி கும்பல்: தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் திடீர் திருப்பம்

அரக்கோணத்தில் போலீஸார் பிடியில் சிக்கிய அசாம் இளைஞர் உள்ளிட்ட 3 பேர் ‘ரைஸ் புல்லிங்’ மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீவிர வாதிகள் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் நகர காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை மாலை ரோந்து சென்றனர். அப்போது 3 நபர்கள் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று, பேசிக் கொண்டிருந்தனர்.

போலீஸாரைப் பார்த்ததும், அவர்கள் மூவரும் தப்பி ஓடினர். அவர்களில் ஒரு இளைஞரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். அவரது பையை சோதனையிட் டதில் 4 பாக்கெட்களில் சிவப்பு பாஸ்பரஸ் இருந்தது. அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மொகிபுல்லா (37) என்பது தெரியவந்தது. வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. பிடிபட்ட நபர் தீவிரவாதியாக இருக்கலாம் என சந்தேகித்து, தக்கோலம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், தப்பி ஓடிய இருவரை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மொகிபுல்லாவின் செல்போனுக்கு தப்பி ஓடியவர்கள் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தனர். அந்த அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்த போலீஸார், ஞாயிற்றுக்கிழமை காலை இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ (42), எஸ்.ஆர்.கேட் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (36) என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், 10-ம் வகுப்பு வரை படித்துள்ள ராஜூ, இணையதளங்களை பார்த்து ‘ரைஸ் புல்லிங்’ மோசடி தொடர்பாக சில விஷயங்களை தெரிந்துகொண்டார். தனது இணையதள முகவரி உதவியுடன் ‘ரைஸ் புல்லிங்’ தொடர்பான தகவல்களை பரவ விட்டுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய அசாம் நபர் மொகிபுல்லா, அரக்கோணம் வந்துள்ளார். அசாம் இளைஞரை ஏமாற்ற தனது நண்பர் இஸ்மாயில் என்பவரை ராஜூ உடன் அழைத்து வந்துள்ளார். உரக்கடை ஒன்றில் சுமார் ஒரு கிலோ யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை வாங்கியுள்ளார். அதனை மிக்ஸியில் அரைத்து நிறத்துக்காக குங்குமத்தை சேர்த்துள்ளார். இரிடியம் நிறைந்த அரிசி என பாக்கெட் செய்து மொகிபுல்லாவிடம் கொடுக்கச் சென்றுள்ளனர்.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் மூவரும் பேசிக்கொண் டிருந்தபோது போலீஸார் வந்ததும் இவர்கள் தப்பி ஓடியுள்ளனர். பிடிபட்டவர்கள் மோசடி கும்பல். தீவிரவாதிகள் யாரும் இல்லை’’ என தெரிவித்தனர்.

தீவிரவாதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘ரைஸ் புல்லிங்’ மோசடி கும்பல் என தெரியவந்ததால் போலீஸார் நிம்மதி அடைந்தனர். சிக்கிய 3 பேரையும் மோசடி வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x