Published : 31 May 2015 03:17 PM
Last Updated : 31 May 2015 03:17 PM

சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி

சவுதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், பொழிக்கரை கிராமத்தினை சேர்ந்த சிலுவை என்பவரின் மகன் மதிவளன், 29.5.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழு மீனவர்களுடன் சவூதி அரேபியா நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த மீனவர் மதிவளன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரணமடைந்த மதிவளனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து அவரது குடும்பத்திற்கு இறுதி பணப் பயன்களை பெற்றுதர இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பாரதப் பிரதமரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மதிவளன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x