Published : 29 May 2015 09:16 AM
Last Updated : 29 May 2015 09:16 AM

வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்: ஏரிக்கு தனி நீர்வரத்து கால்வாய் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந் தகம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தாங்கல் சரணாலய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தனி நீர்வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணி கார்த்திகேயன் கூறியதாவது: வந்தவாசி பகுதியை சேர்ந்த நான், கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் சரணாலயத்துக்கு வந்தேன். அங்கு ஏரியில் நீர் இல்லாததால் பறவைகளை காண முடியவில்லை. ஏரியில் உள்ள சிறிதளவு நீரும் மதகுகள் வழியாக வெளியேறி வருகிறது. ஏரியில் தண்ணீரை சேமிக்கும் வகையில் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், உள்ளூரைச் சேர்ந்த மரம் வளர்ப்போர் சங்க தலைவர் மாசிலாமணி கூறிய தாவது: வேடந்தாங்கல் ஏரிக்கு, உத்திரமேரூரில் இருந்து கட்டியாம் பந்தல் வழியாக மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் கால்வாய் மூலமே நீர்வரத்து உள்ளது. கட்டியாம்பந்தல் கிராமத்தில், வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப் பட்டுள்ள சிறிய தடுப்பணை, நீர்வரத்து காலங்களில் வனத்துறையினரால் மூடப்படும். இதையடுத்து, வெள்ளபுத்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும். அந்த ஏரி நிரம்பிய பின்னரே வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியும்.

ஆனால், வெள்ளபுத்தூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை வனத்துறையினர் முறையாக திறப்பதில்லை. ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தனியான நீர்வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சரணாலய வனச்சரகர் முருகேசன் கூறியதாவது: நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. வெள்ளபுத்தூர் ஏரியின் நீர்வரத்து கால்வாயை முறையாக மூடி திறப்பதில்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது. கடந்த ஆண்டு இந்த கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. வேடந் தாங்கல் ஏரியின் மதகுகள் நல்ல முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழை பெய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x