Published : 26 May 2015 09:18 PM
Last Updated : 26 May 2015 09:18 PM
பதிவு செய்யப்படாத படகுகள், அதிவேக இன்ஜின்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக விசைப்படகு உரிமையாளர்கள், மீன்வளத் துறை அதிகாரிகள் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 750 விசைப்படகுகள் உள்ளன. பதிவு செய்யப்படாத படகுகள் 250 உள்ளன. பதிவு செய்யப்படாத படகுகளை தடை செய்யுமாறு விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேபோல, 150 குதிரைத் திறனைவிட அதிக திறன் கொண்ட அதிவேக இன்ஜின்கள் பயன்படுத்துவது மற்றும் அதிக நீளமான படகுகளை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும்போதே, அதிகாரிகள் இவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரினர்.
இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு காசிமேட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால், இந்த ஆய்வு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி விசைப்படகு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக விசைப்படகு உரிமையாளர்கள் – மீன்வளத் துறை அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை.
இதுகுறித்து சென்னை - செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.அரசு, ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தையில் எங்கள் சங்கம் உட்பட 3 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிவேக இன்ஜின்கள் மற்றும் பதிவு செய்யப்படாத படகுகள் குறித்து ஆய்வு செய்து அவற்றுக்கு தடை விதிக்கவேண்டும் என்பதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதை ஏற்க அதிகாரிகள் மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 27-ம் தேதி (இன்று) முடிவு செய்ய உள்ளோம். 29-ம் தேதிக்குள் தீர்வு ஏற்படாவிட்டால் மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகும் கடலுக்குச் செல்லமாட்டோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT