Published : 09 May 2014 12:00 AM
Last Updated : 09 May 2014 12:00 AM

சிபிஐ கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் திடீர் சஸ்பெண்ட்

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ-யின் கூடுதல் இயக்குநராக வியாழனன்று பொறுப்பேற்றார்.

இப்பதவியை ஏற்றுள்ள முதல் பெண் அர்ச்சனா ராமசுந்தரம் ஆவார். ஆனால், உரிய விதிகளைப் பின்பற்றாமல், சிபிஐயில் பொறுப்பேற்றிருப்பதாகக் கூறி தமிழக அரசு அர்ச்சனா ராமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது.

மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கு சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா அளித்த பரிந்துரையின் பேரில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனத்தை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் வினித் நரேன் இந்த நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், அர்ச்சனா ராமசுந்தரத்துக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே அர்ச்சனா ராமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது தமிழக அரசு. மேலும், தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா மத்திய உள் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அர்ச்சனா ராமசுந்தரம் விதிகளைப் பின்பற்றாமல் சிபிஐ பணியில் சேர்ந்துள்ளார். அவரை தகுதி நீக்கம் செய்து மாநில அரசுப் பணிக்கு உடனே திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x