Published : 30 May 2015 11:30 AM
Last Updated : 30 May 2015 11:30 AM

மாணவர் அமைப்புக்கு தடை: சென்னை ஐஐடி-யை கண்டித்து மறியல்; 100-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போன்ற மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திடீர் சாலை மறியல், போராட்டம், கைது நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து இன்று காலை (சனிக்கிழமை) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கார் பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அங்கு உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் போலீஸார் - மாணவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய கைலாஷ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவப்படங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர்.

பிரச்சினை என்ன?

முன்னதாக, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு கடந்த வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் சென்னை ஐஐடியில் கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த அமைப்பு அவ்வபோது கூட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த மாதம் குப்பம் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஆர்.விவேகானந்தா கோபாலின் சொற்பொழிவு ஐஐடியில் நடை பெற்றது.

இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் "மோடி அரசு இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறது, தொழிலாளர் நலச் சட் டங்கள், 100 சதவீத அந்நிய முதலீடுக்கு அனுமதி உள்ளிட்ட முடிவு களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டை சூறையாட வழி வகுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை குறித்து சில மாணவர்கள் மத்திய மனித வளத் துறையிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்திடம் மத்திய மனித வளத் துறை விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை ஐஐடி நிர்வாகம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு:

ஐஐடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், மத்திய அரசும், கல்வி நிறுவனமும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம் சமூக சீர்திருத்த கருத்துகளையும், கல்வியை காவிமயமாக்கும் பாஜக அரசு பற்றியும் விமர்சித்தது. இதனை ஆதிக்க சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மாணவர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது சட்ட விரோதமானதாகும்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "சங் பரிவார் அமைப்புகள் கேள்வி கேட்டதாலேயே எந்த விசாரணையும் இன்றி, கருத்து சுதந்திரத்தைப் பறித்த ஐஐடி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகனும் இதை கண்டித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x