Published : 30 May 2015 08:35 AM
Last Updated : 30 May 2015 08:35 AM
பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களின் தர வரிசைப் பட்டியல் ஜூன் 19-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விநியோகிக்கப்பட்டன.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் நீங்கலாக மற்ற இடங்களில் விண்ணப்ப விற்பனை 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதியான நேற்று வரையிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
கடைசித் தேதிக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருந்தன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இந்த நிலையில், கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ஏறத்தாழ 35 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித் துள்ள மாணவர்களுக்கு ஜூன் 15-ம் தேதி ஆன்லைனில் “ரேண்டம் எண்” என்ற சிறப்பு எண் ஒதுக்கப்படும். மாணவர்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு ரேண்டம் எண்ணை அறிந்துகொள்ளலாம்.
ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடர்ந்து, ஜூன் 19-ந் தேதி மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT