Published : 20 Apr 2015 08:38 AM
Last Updated : 20 Apr 2015 08:38 AM

அரபிக்கடல் மீன்கள் வரத்து அதிகரிப்பு: மீன் பிடி தடைக்காலத்தால் வானகரம் சந்தைக்கு விலை உயர்ந்தும் குறையாத மக்கள் கூட்டம்

தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் அமலில் உள்ளதால், வானகரம் மீன் சந்தையில் அரபிக் கடல் மீன்களின் வரத்து அதிகரித் துள்ளது. இவற்றை வாங்க ஆயிரக் கணக்கான மக்கள் வானகரம் மீன் சந்தையில் குவிகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மதுர வாயல் அருகே உள்ளது வானகரம் மீன் சந்தை. 52 கடைகளுடன் 2 ஏக்கர் நிலத்தில், பார்க்கிங் வசதியுடன் பரந்து விரிந்துள்ளது.

திருவேற்காடு, பூந்தமல்லி, அம்பத் தூர், மதுரவாயல் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரும்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வடபழனி, கே.கே. நகர் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சென் னைவாசிகளின் மீன் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது வானகரம் மீன்சந்தை.

கடந்த 15-ம் தேதி முதல், அடுத்த மாதம் 29-ம் தேதி வரை மொத்தம், 45 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள வங்க கடலோரத்தில், மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. எனவே, தமிழகத்துக்கு, பிற மாநிலங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து வரும் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், வானகரம் மீன் சந்தையில், அரபிக்கடல் மீன்க ளின் வரத்து உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, வானகரம் மீன் சந்தை நிர்வாகி துரை கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கான மீன் தேவையை வானகரம் மீன் சந்தை பூர்த்தி செய்து வருகிறது. இந்த சந்தைக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து, நாள் தோறும் ஒரு லாரிக்கு 3,500 கிலோ மீன்கள் முதல், 6 ஆயிரம் கிலோ மீன்கள் வரை ஏற்றிவரும் 15 முதல் 20 வரையிலான லாரிகள் வருவது வழக்கம்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அரபிக் கடல் மீன்கள், ஆந்திரா நெல்லூர் ஏரி மீன்கள், பண்ணை இறால் என தினமும், 40 முதல் 50 லாரி மீன்கள் வரை வருகின்றன. இதில், 80 சதவீத மீன்கள், அரபிக் கடல் மீன்கள் தான். பொதுமக்கள் வார நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் மிக அதிகமாக வருகின்றனர்.

அதே நேரத்தில், வானகரம் சந்தையில் மீன்களின் வரத்து அதிகரித்த நிலையிலும் மீன் பிடித் தடைக்காலத்தால் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ, 300 முதல் 500 ரூபாய் வரை விற்ற வஞ்சிரம் மீன்கள், 450 முதல் 550 ரூபாய் வரையும்,130 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்ற சுறா மீன்கள், 150 ரூபாய் முதல், 300 ரூபாய் வரையும், 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்ற சங்கரா மீன்கள், 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றன.

அதே போல், 220 ரூபாய் விற்ற இறால் மீன்கள் 260 ரூபாய்க்கும், 420 ரூபாய் விற்ற வவ்வா மீன்கள் 450 ரூபாய்க்கும், 200 ரூபாய் விற்ற சீலா மீன்கள் 250 ரூபாய்க்கும், 50 ரூபாய் விற்ற மத்தி மீன்கள் 70 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், வானகரம் மீன் சந்தையில் அரபிக்கடல் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. அந்த மீன்களை வாங்க வானகரம் மீன் சந்தையில் நேற்று ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x