Published : 22 Apr 2015 12:23 PM
Last Updated : 22 Apr 2015 12:23 PM

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் அகவிலைப்படி 6% உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2015 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் 6% உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த அகவிலைப்படி 01.01.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 1222.76/- கோடி ரூபாய் செலவாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x