Published : 08 Apr 2015 08:11 PM
Last Updated : 08 Apr 2015 08:11 PM
சென்னை கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை 5 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விரைவில் ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு – ஆலந்தூர் இடையே பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் 5 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முதல்கட்ட அறிக்கையை லக்னோவில் உள்ள ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையரகத்துக்கு ஓரிரு நாட்களில் அனுப்பவுள்ளனர். பிறகுதான் டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்படவுள்ளது. பின்னர், வாரியத்தின் பதில் அறிக்கை வந்தவுடன் 2 வாரங்களுக்கு பிறகு, 2-ம் கட்ட ஆய்வு நடத்தப்படும். தேவைப்பட்டால், நாங்கள் நேரில் சென்று விளக்கம் அளிக்கவும் தயாராகவுள்ளோம்.
அடுத்தகட்டமாக சின்னமலை விமான நிலையம் (9 கி.மீ.), ஆலந்தூர் பரங்கிமலை (1 கி.மீ.) இடையே நடந்து வரும் மெட்ரோ ரயில் இறுதிக் கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். தண்டவாளம் அமைக்கப்பட்டு, சிக்னல் அமைத்தல், ரயில் நிலையங்கள் கட்டுமானம் என ஒட்டு மொத்தமாக 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் நவம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர், டிசம்பரில் பாதுகாப்பு ஆணையரக குழு மூலம் ஆய்வு நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT