Published : 02 Apr 2015 08:15 AM
Last Updated : 02 Apr 2015 08:15 AM

கல்வி, சுகாதார குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது

கல்வி, சுகாதார குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 36ஆயிரத்து 593 நலிவடைந்த குழந்தைகளை கல்விக்கூடங்களில் சேர்த்தது, பள்ளிக்கு செல்லாத 46ஆயிரத்து 737 குழந்தைகளை சேர்த்தது, மாணவிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பது, மாணவர்களுக்கு மடிகணினி, மிதிவண்டி வழங்கியது உள்ளிட்ட திட்டங்களால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆரம்பித்தல், 24 மணி நேர சுகாதார மையங்கள் அமைத்தல், மாநகர, மாவட்ட மருத்துவமனைகளில் எண்ணற்ற கட்டமைப்பு வசதிகள், முதல்வர் காப்பீட்டு திட்டம் போன்றவற்றால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது.

அதிமுக அரசு செயல்படுத்துவது போன்ற வறுமை ஒழிப்பு திட்டத்தை எந்த அரசும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நாடு முழுவதுக்கும் ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், 2015-16-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.862 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

போதுமான நிதி ஒதுக்கீடு

2010-11-ம் ஆண்டில் 75.95 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 2014-15-ல் 122.86 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. விவசாயத் துறைக்கு 2010-11-ல் ஒதுக்கப்பட்ட நிதி 2 ஆயிரத்து 72 கோடியே 43 லட்சமாகும். ஆனால், 2015-16-ல் 6 ஆயிரத்து 613 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் சாகுபடி முறைகளை பரவலாக்கல், தோட்டக்கலைப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், துல்லிய பண்ணை முறை, பசுமைக்குடில் சாகுபடி, என பல திட்டங்களுக்கு அதிமுக அரசு போதுமான நிதியை ஒதுக்கியுள்ளது.

சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி,விற்பனை கட்டமைப்புகளையும் தரம் உயர்த்தி, விவசாய உற்பத்தி பொருட்களை பதப்படுத்தும் தொழிலையும் ஊக்குவித்தது போன்ற திட்டங்களுக்கு அதிமுக அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x