Published : 05 Apr 2015 03:08 PM
Last Updated : 05 Apr 2015 03:08 PM
வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடைபெற்ற உடனே இது தற்கொலை அல்ல; இதில் விவசாயத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதன்முதலாக குரல் எழுப்பினேன்.
தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில் தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக்குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், சிபிசிஐடி விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன.
நேற்றிரவு சிபிசிஐடி போலீசாரால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ என்கிற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.
எனவே, இவ்வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப்பட்டிருப்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும்.
ஏனெனில் சிபிசிஐடி விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT