Published : 14 Apr 2015 10:43 AM
Last Updated : 14 Apr 2015 10:43 AM

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கும் வகையில் எந்த பலனுமின்றி முடிந்துள்ளதாகவே தெரிகிறது. 50 சதவீத ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்தபட்சமாக 5.5 சதவீத உயர்வு என்பது மனசாட்சியுள்ள எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதிமுக அரசு தொழிலாளர் விரோத அரசு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிதி நிர்வாகத்தில் மிகச்சிறந்த அரசு அதிமுக அரசு என்று அமைச்சர்கள் கூறிவரும் வேளையில் போக்குவரத்துத்துறை அமைச்சரோ அரசிடம் நிதி இல்லை என்று தொழிலாளர் வயிற்றில் அடித்திருப்பது முன்னுக்குப்பின் முரணாகவும், நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது.

ரூ.9,200 கோடி

தொழிலாளர்களிடம் இருந்து ஓய்வூதியம், சேமநலம், மருத்துவம் போன்ற பல்வேறு வகைகளில் இந்த அரசு பிடித்தம் செய்த தொகை சுமார் ரூ.9,200 கோடி. தொழிலாளர்கள் மிகவும் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டத்துக்கு குழு அமைத்து பின்னர் முடிவு செய்யலாம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். 2012-ம் ஆண்டிலிருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியப் பலன்களை தேதி குறிப்பிடாமல் 5 கட்டமாக கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றபின் நிம்மதியாக இருக்கலாம் என்று உழைப்பின் ஊதியத்தில் சேர்த்த பணத்தை ஓய்வுபெற்ற நாளிலேயே வழங்காமல் காலதாமதம் செய்வது எங்கள் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதற்கு சமம் ஆகாதா என்று தொழிலாளர்கள் குமுறுகின்றனர். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் கண்டனம்

போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, தொழிற்சங்கங்களின் கோரிக்கையான 50 சதவீத ஊதிய உயர்வை நிராகரித்துவிட்டது. தன்னிச்சையாக முடிவெடுத்து 5.5 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

விலைவாசி உயர்வு

கடைசியாக கடந்த 2010-ல் நடைபெற்ற 11-வது ஊதிய ஒப்பந்தத்தின்போது 14 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு 60 சதவீதம் வரை விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியிருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். இதை பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஆட்கள் இல்லாத 25 சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் சித்திரை திருநாளில் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x