Published : 11 Apr 2015 10:12 AM
Last Updated : 11 Apr 2015 10:12 AM

7 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி: ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க உதவுவேன் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதி

ஆந்திர மாநில சிறையில் உள்ள தமிழர் களை மீட்க என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட, திருவண்ணாமலை மாவட்டம் வேட்ட கிரிபாளையம் கிராமம் சசிகுமார், முருகன், பெருமாள், காந்தி நகர் கிராமம் மகேந்திரன், முருகாப்பாடி கிராமம் முனுசாமி, மூர்த்தி, காளசமுத்திரம் கிராமம் பழனி ஆகிய 7 பேர் குடும்பத்துக்கு தேமுதிக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை, அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு வழங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, “காட்டில் ஆடு, மாடு, சிங்கம், புலி இறந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படு கின்றனர். அப்படி இருக்கும்போது சாதாரண மக்களை துப்பாக்கியால் சுடுவது எந்த வகையில் நியாயம். தவறு செய்தால் நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை வாங்கி கொடுங்கள். அவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கட்டும்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அமைச்சர்கள், ஆட்சியர்கள் யாரும் வரவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 85 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு வேலை கொடுத்து இருந்தால், அவர்கள் ஏன் ஆந்திர மாநிலத்துக்குச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். ஆந்திர மாநில சிறையில் உள்ள தமிழர்களை மீட்க என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். 20 பேர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x