Published : 01 Apr 2015 10:49 AM
Last Updated : 01 Apr 2015 10:49 AM

கொடைக்கானலில் ஆண்டுதோறும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் வெப்பம்

சர்வதேச கோடைவாசஸ்தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கிறது. இந்த நிலை நீடித்தால் இன்னும் 100 ஆண்டுக ளில் கோடைவாசஸ்தல அந்தஸ்தை கொடைக்கானல் இழக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் வசிப்பதற்காக இங்கி லாந்தில் நிலவும் காலநிலையை ஒத்த இடங்களைத் தேடினர்.

1821-ம் ஆண்டு கொடைக்கானலை ஆய்வு செய்தனர். இந்த இடம், இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் எனக் கருதினர். அதனால், 1845-ம் ஆண்டு முதல் இங்கு பங்களாக்கள் கட்டி, ஆங்கிலேயர்கள் குடியேறத் தொடங்கினர்.

தொடக்கத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் குதிரை சவாரி மூலம் ஆங்கிலேயர் கொடைக்கானல் சென்று வந்தனர். 1914-ம் ஆண்டு, கொடைக்கானலுக்கு காட் ரோடு வழியாக முழுமையான சாலை வசதியை அவர்கள் ஏற்படுத்தினர். ஆங்கிலேயர் காலத்தில் வசதி படைத்தவர்கள், வெளிநாட்டினர் மட்டுமே அனுபவித்து வந்த இந்த கோடைவாசஸ்தலம், தற்போது ஏழை, நடுத்தர மக்கள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

இங்கு கோக்கர்ஸ் வாக், அப்பர்லெக், குணா குகை, தொப்பித் தூக்கி பாறைகள், மதிகெட்டான் சாலை, செண்பகனூர் அருங்காட்சியகம், பேரிஜம் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட 20 சுற்றுலாத் தலங்கள் உள்ளதால், இவற்றை சுற்றிப் பார்க்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த சுற்றுலாத் தலங்களை வைத்தே, கொடைக்கானல் நகரின் வளர்ச்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்த மக்கள் தொகை, வாகனப் பெருக்கம், அதிலிருந்து வெளியாகும் புகை மற்றும் கட்டிடங்கள் அதிகரிப்பால் கொடைக்கானலின் வழக்கமான ஈரப்பதம் குறைந்து வருகிறது. மேலும், வெப்பநிலை, காற்றின் வேகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாலும், படிப்படியாக கோடை வாசஸ்தலம் என்ற அந்தஸ்தை கொடைக்கானல் இழந்து வருவதாக வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி குமரவேல் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘வழக்கமாக மார்ச் 15-ம் தேதி முதலே கோடை சீசன் தொடங்கிவிடும். தற்போது மழை பெய்வது தாமதமாகி விட்டதால் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் இந்த ஆண்டு சீசன் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு ஆண்டும், 10 நாள் சீசன் முன்பும், பின்புமாக தொடங்குவது இயல்புதான். கொடைக்கானல், ஊட்டி கோடைவாசஸ்தலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலநிலை தற்போது இல்லை. கொடைக்கானலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் 18 டிகிரி செல்சியஸாக இருந்த வெப்பநிலை, தற்போது 19.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கிறது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பு சாதாரணம்தான் என்றாலும், இதேநிலை நீடித்தால் 100 ஆண்டுகளில் கொடைக்கானல் மற்ற சாதாரண இடங்களைப்போல ஆகிவிடும். வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அதிக மரங்களை நட வேண்டும். வாகன புகை, கட்டிடங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

யூகலிப்டஸ், பைன் மற்றும் வேட்டில் மரங்கள் அதிகளவில் இருப்பதும், கொடைக்கானல் வெப்ப நிலை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். 20 ஆண்டு வயதுள்ள யூகலிப்டஸ் மரம் ஒன்று, ஒரு நாளைக்கு 1,500 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.

இந்த மரம் பூமியில் உள்ள தண்ணீரை மட்டுமின்றி, மேகத்தில் படர்ந்திருக்கும் ஈரப்பதத் தையும் இழுத்து விடுகிறது. அதனால், கொடைக்கானலில் மழைப் பொழிவும் குறைகிறது. கோடைவாசஸ்தல அந்தஸ்தை தக்கவைக்க இந்த மரங்களை அகற்றிவிட்டு சோலை மரங்களை நட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x