Published : 11 Apr 2015 09:08 AM
Last Updated : 11 Apr 2015 09:08 AM

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 20-ல் தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளன்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ,மாணவிகள் அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் உற்சாக காணப்பட்டனர்.

இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதி தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் கூறுகையில், “விடைத்தாள் மதிப்பீட்டு பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 75 மையங்களில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அஞ்சல்துறை லாஜிஸ்டிக்ஸ்

தமிழகத்தில் நேற்றுடன் முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடைத்தாள்களை அவற்றை மதிப்பிடும் மையங்களுக்கு அஞ்சல்துறையின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு வெற்றிகரமாகக் கொண்டுபோய் சேர்த்துள்ளது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து தமிழக அஞ்சலக வட்டாரத் தலைமையக உயரதிகாரிகள் கூறும்போது, “முன்பெல்லாம், விடைத்தாள்கள் தபால் நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும்.

இந்த ஆண்டிலிருந்து, நாங்களே எங்களது வாக னங்களைக் கொண்டு போய் 68 கல்விமாவட்டங்களிடமிருந்து, விடைத்தாள்களைப் பெற்று, உரிய இடத்தில் ‘டோர் டு டோர்’ முறையில் பட்டுவாடா செய்தோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x