Published : 01 Apr 2015 07:31 AM
Last Updated : 01 Apr 2015 07:31 AM

குழந்தைகள் திருமணம் தடை சட்டமானது முஸ்லிம் தனி சட்டத்துக்கு எதிரானது அல்ல: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

குழந்தைகள் திருமண தடை சட்டம், முஸ்லிம் தனி சட்டத்துக்கு எதிரானது அல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த முகமது அப்பாஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

முஸ்லிம்களின் திருமணங்கள் முஸ்லிம் திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களில் பருவம் அடைந்து, நல்ல மனநிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியும்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை, சமூக நலத்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். முஸ்லிம் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை அதிகாரிகள் தடுக்க முடியாது. மாநிலத்தில் முஸ்லிம்கள் தனிச் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை, குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தை மேற்கோள்காட்டி தடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு:

குழந்தைகள் திருமண தடைச் சட்டம், முஸ்லிம் தனிச் சட்டத்துக்கு எதிரானது அல்ல. குழந்தை திருமண தடைச் சட்டப்படி, பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பிறகே திருமணம் செய்ய முடியும். அந்த 18 வயதுக்குள் பெண்கள் தேவையான கல்வி மற்றும் சம உரிமையைப் பெற முடியும். இந்த சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், குழந்தைகள் திருமண தடைச் சட்டம் பொதுநலன் சார்ந்தது. பொதுநலன் சார்ந்த சட்டமா அல்லது தனிச் சட்டமா என வரும்போது பொதுநலன் சார்ந்த சட்டம்தான் முக்கியம். மனித உரிமை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு உட்பட பல்வேறு சர்வதேச பிரகடனங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அவைகளில் பெண்ணின் திருமண வயது 18 என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் திருமண தடைச் சட்டம் முஸ்லிம் தனிச் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்தனர். பின்னர், அந்த சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்துதான் இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அந்த சிறுமியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 18 வயது நிரம்பும் வரை திருமணம் செய்து கொடுப்பதில்லை என பெற்றோர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், சிறுமியை பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x