Last Updated : 30 May, 2014 10:02 AM

 

Published : 30 May 2014 10:02 AM
Last Updated : 30 May 2014 10:02 AM

கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் வரும்: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேட்டி

தேர்தல் தோல்வியின் எதிரொலி யாக கட்சிக்குள் நிர்வாக ரீதியான மாற்றங்கள் இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு சென்னையில் வியாழக்கிழமை கூடியது. அதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தேர்தல் முடிவுகளிலிருந்து, மக்கள் உங்களை மாற்றாக கருதவில்லை என்று தெரிகிறது. மக்களுக்கும் உங்களுக்குமான தொடர்பு அறுந்துவிட்டது என்று கூறலாமா?

தேசிய அளவில் இடதுசாரிகள் தங்களை மாற்றாக முன் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. மாற்று பொருளாதார கொள்கைகள்தான் எங்களுக்கு மாற்று அரசியல். அதை மக்களிடம் இடதுசாரிகள் முழுமையாக கொண்டு சேர்க்க வில்லை. பல இடங்களில் இடது சாரிகள் தலைமையேற்று நடத்திய மக்கள் இயக்கங்களை வாக்கு களாக மாற்ற இயலவில்லை. ஆனால், பாஜகவுக்கும் காங்கி ரஸுக்கும் வித்தியாசம் இல்லை என்று மக்கள் தங்களது அனுபவங் களால் உணர்ந்து கொள்வர்.

தேர்தல் தோல்வியிலிருந்து கட்சியை மீட்க என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

தோல்வியைப் பற்றிய விவாதங் கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. எங்களது அரசியல் நிலைப்பாடு சரியா, தோல்விக்கான காரணிகள் என்ன என்பதை கண்டறிந்து அதை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்போம். என்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கண்டறிந்த பிறகு, நிர்வாக ரீதியாக மாற்றங்கள் ஏற்படும்.

என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்?

மேலிருந்து கீழ்வரை மாநாடுகள் நடக்கும். அதில் தேர்தல் தோல்வி மட்டுமல்லாது,பொதுவாக கட்சி ஏன் முன்னேறவில்லை என்று விவாதித்து அதற்கான தீர்வுகளை கண்டறிவோம். அப்போது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மாற்றங்கள் இருக்கும். அதன் விளை வுகள் என்ன என்பது கட்சியின் தேசிய மாநாட்டில்தான் தெரியும்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சீத்தாராம் யெச்சூரி ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மையா?

ஊடகங்களில் எவ்வாறு இப்படி தவறான தகவல்கள் வெளியாகின் றன என்று புரியவில்லை. தேர்தல் தோல்விக்கு தனிநபர் காரணமாக முடியாது. கட்சியின் தலைமைக் குழுக்கள்தான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முறையில் நாங்கள் அதற்கு பொறுப்பேற்கிறோம்.

மோடியின் அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறீர்களா?

பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணம், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த மிகக் கடுமையான கோபம். மக்களுக்கு வளர்ச்சியையும் வேலைகளையும் வழங்குவதாக பாஜகவும் மோடி யும் உறுதி அளித்துள்ளனர். அவர்கள் கூறுவது யாருக்கான வளர்ச்சி என்று யோசிக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கக் கூடிய சீரற்ற வளர்ச்சியாக இருந்தால், அது தேவையில்லை.

புதிய ஆட்சியில் இடதுசாரிகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?

பாஜகவின் பொருளாதார கொள்கை மற்றும் வகுப்புவாத திட்டங்களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். தனியார்மயத்தை அதிகப்படுத்துவது, பொது நிறுவ னங்களை விற்பது உள்ளிட்ட திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையிலேயே பாஜக கூறியி ருந்தது. இந்நிலையில், உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும் இந்த அரசின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து, இடது சாரிகள் போராட்டத்தை மிக வலுவாக நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இந்துத்வா திட்டங்களான ராமர் கோயில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை நீக்குவது உள்ளிட்ட வைகள் முன்வைக்கப்படுகின்றன. இதிலிருந்து, இந்தியாவின் பன் முகத்தன்மையை இந்த அரசு அங்கீகரிக்கவில்லை என்று தெரி கிறது. எனவே சிறுபான்மையினரி டம் இருக்கும் பயம் நியாயமானது. மதச்சார்பின்மையையும், சிறுபான் மையினரையும் காப்பது இடதுசாரி களின் முன்னுரிமையாக இருக்கும்.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவது பற்றி பேசப்பட்டு வருகிறதே?

நாங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து இடதுசாரிகளையும் ஒன்றிணைப்பதற்குதான் பேசி வருகிறோம். அந்த செயல் பாட்டின்போது இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரு குறைந்தபட்ச தத்து வார்த்த, அரசியல் செயல்திட்ட உடன்பாட்டுக்கு வந்தால் எதிர் காலத்தில் இரு கட்சிகளின் ஒன்றிணைப்புக்கு அது கொண்டு செல்லலாம். ஆனால், தற்போ துள்ள நிலையில், அனைத்து இடதுசாரிகளை ஒன்றிணைத்த விரிவான இடதுசாரி ஒற்றுமையே தேவை.

அரசியல் சாசன சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது பற்றி தங்களது நிலைப்பாடு என்ன?

அரசியல் சாசன சட்டம் 370-வது பிரிவைப் பற்றி இந்தியாவில் விழிப்புணர்வு இல்லை. காஷ்மீரின் தனி அந்தஸ்து பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கும் அந்த சட்டப்பிரிவின் மூலம்தான் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. அதை நீக்குவது, காஷ்மீர் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும். இது இந்திய தேசத்துக்கே ஆபத்தாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x