Published : 23 Apr 2015 10:00 AM
Last Updated : 23 Apr 2015 10:00 AM

2 நாள் வேலைநிறுத்தம் முடிந்தது: பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த கோரி 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இன்று மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப் பாற்ற வேண்டும், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற் கான பரிந்துரையை ஏற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று முன் தினம் தொடங்கி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றதால், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. பிஎஸ்என்எல் கட்டண வசூல் மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் முடிந்து ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.

இது தொடர்பாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டமைப்பின் தமிழக செயலாளர் பட்டாபிராமன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தை காக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் போராட்டத்தில் 90 சதவீதம் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தம் முடிந்து 22-ம் தேதியன்று நள்ளிரவு முதலே ஊழியர்கள் வேலைக்கு திரும்புவார்கள். வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்ட பணிகளை சரி செய்ய ஊழியர்கள் முழு வீச்சில் பணியாற்றவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x