Published : 09 Apr 2015 10:21 PM
Last Updated : 09 Apr 2015 10:21 PM

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஏப்.11-ல் போராட்டம்: 12 மணி நேரம் மட்டுமே பங்க் இயங்கும்

சில்லறை விற்பனையாளர்களுக்கு விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் ஏப்ரல் 11(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி நேரம் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.1.25-ம் கமிஷன் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதாந்திர சராசரி பெட்ரோல் விற்பனை 170 கி.லிட்டராக இருக்கும் விற்பனையாளருக்கு இத்தொகையை முறையே ரூ.3.50, ரூ.2 ஆக அதிகரித்து வழங்க மத்திய அரசுக்கு அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் பெட்ரோல் நிலையங்களின் மாதாந்திர பெட்ரோல் விற்பனை 130 கி.லிட்டராக மட்டுமே உள்ளது. எனவே அந்த விற்பனை அளவை குறைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதத்தில் விற்பனையாளர்களின் விளிம்புத் தொகையை (மார்ஜின்) உயர்த்தி வழங்க வேண்டும்.

விற்பனை நிலையங்களில் உள்ள பிற வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுத்துள்ள குத்தகை நிலத்தை திரும்பப் பெறுவதற்கான கொள்கை வரைவு எளிதாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 11) நாடு தழுவிய அளவில் உள்ள 53 ஆயிரம் சில்லறை விற்பனை நிலையங்களும் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்வதில்லை எனவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விற்பனை நிலையங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், அன்றைய தினம் அரசுக்கு ரூ.300 கோடி கலால் வரி இழப்பும், ரூ.725 கோடிக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x