Published : 14 Apr 2015 10:18 AM
Last Updated : 14 Apr 2015 10:18 AM

கேரளாவில் வேர்கடலை விற்று பொறியியல் படிக்கும் மாணவர்: மாற்றத்தை விதைத்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ.வின் முகநூல் பதிவு

முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அடித்தளமிட்டு வருகின்றன. அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதி மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினரின் ஒரு முகநூல் பதிவானது, சாலையோரத்தில் வேர்கடலை விற்று பொறியியல் படித்து வரும் மாணவரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினராக இருப் பவர் தாமஸ் ஐசக். இவர் கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆட்சியின்போது நிதி அமைச்சராக இருந்தார். தற்போது ஆலப்புழா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

முகநூலில் இவர் அண்மையில் ஒரு பதிவு வெளியிட்டார். அதன் சாரம்சம் இதுதான் “சில தினங் களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் கயிறு தொழிலாளர்களின் பிரச் சினைகளைத் தீர்க்க கோரிய போராட்டம் விஸ்வரூபமாக எழுந் தது. தலைமை செயலகம் முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் நடைபெற்ற அந்த போராட்டம் வெற்றி பெற்றது.

போராட்டம் முடிந்ததும் தலைமை செயலக சாலையில் நடந்து சென்றேன். அப்போது அங்கே தள்ளுவண்டியில் இளம் வயது பையன் ஒருவர் வேர்கடலை விற்றுக் கொண்டிருந்தார். கடலையை கொரித்தபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

அப்போதுதான் அவர் பெயர் அருண்குமார் என்பதும், பொறியி யல் படித்து வருவதும், குடும்ப சூழலால் பகுதி நேரமாக வேர் கடலை வியாபாரம் செய்வதும் தெரியவந்தது. அவரது தந்தை ஆட்டோ ஓட்டும் தொழிலாளி. அருணோடு சேர்த்து வீட்டில் மூன்று குழந்தைகள். இந்த மாண வரின் உழைப்பு மிகப் பெரியது” என்பதை விரிவாக மலையாளத்தில் பதிவு செய்திருந்தார்.

முகநூலில் மீள் பதிவு

இந்த பதிவு வெளியான நாளி லேயே ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்திருந்தனர். அது கேரள மாநிலத்தில் முகநூல் பிரியர் களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர் அருண்குமாரின் கல்விக்கு உதவ முன்வந்துள்ளனர்.

பலரும் தலைமை செயலகம் முன்பு வேர்கடலை விற்கும் அருண் குமாரை சந்தித்து உதவி செய்வ தாகவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

தன்னார்வ அமைப்பு ஒன்று அருண்குமாரிடம் மாதம் ரூ.7,000 கொடுப்பதாகவும், கடலை வியா பாரத்தை விட்டுவிட வேண்டும் எனவும் கேட்டது. கடலை வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தால் குழம்பி போன மாணவர் அருண் குமார், தனது தந்தையுடன் சென்று எம்எல்ஏ தாமஸ் ஐசக்கை சந்தித்து ஆலோசனை கேட்க, இதற்கு உரிய ஆலோசனை சொல்லுமாறு முகநூலில் மீண்டும் ஒரு மீள் பதிவு வெளியிட்டுள்ளார் தாமஸ் ஐசக்.

7 ஆண்டுகளாக..

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பேசிய மாணவர் அருண்குமார், ‘நான் கடந்த 7 ஆண்டுகளாக வேர் கடலை வியாபாரம் செய்து வருகிறேன். இப்போது திருவனந்த புரத்தில் உள்ள  சித்ரா பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். தினசரி மாலை 4.30 மணிக்கு கல்லூரி விட்டு வீட்டுக்கு வருவேன். பின்னர் 6.30 மணி முதல் 9 மணி வரை வேர் கடலை வியாபாரம் செய்வேன்.

மார்க்சிஸ்ட் போராட்டம் நடந் ததால், வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று தலைமை செய லகம் பகுதியில் விற்க சென்றேன். என்னிடம் கடலை வாங்கியவர் முன்னாள் அமைச்சர் என அப் போது எனக்கு தெரியாது. அவர் சென்ற பின்பு சக வியாபாரிகள் சொல்லிதான் தெரிந்து கொண்டேன்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x