Published : 20 Apr 2015 10:18 AM
Last Updated : 20 Apr 2015 10:18 AM

சீதாராம் யெச்சூரிக்கு தலைவர்கள் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு தமிழக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்): சீதாராம் யெச் சூரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பொறுப்பில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். வலுவான மற்றும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியை உருவாக்கி இந்திய ஜனநாயகத்தை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று இயக்கத்தின் சார்பிலே அடித்தட்டு மக்களுக்காக பல மேடைகளில் உரையாற்றி, வலிமை சேர்த்தவர் சீத்தாராம் யெச்சூரி. அவர் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக படிப்படியாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. சீத்தாராம் யெச்சூரிக்கு தமாகா சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்): இந்திய இடதுசாரி இயக்கம் தேர்தல் களத்தில் கடுமையான பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் யெச்சூரி, இடதுசாரி இயக்க ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டுவதிலும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இதேபோன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சீதாராம் யெச்சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x