Published : 16 Apr 2015 09:38 AM
Last Updated : 16 Apr 2015 09:38 AM

கொற்கை பாண்டியர்களின் தனி ஆட்சியை உறுதிப்படுத்தும் அரிய நாணயம்: தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழக தலைவர் தகவல்

சங்கக்காலத்தை சேர்ந்த கொற்கை பாண்டியர்களின் 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நாணயம் கிடைத்துள்ளதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நான் சேகரித்து வைத்திருந்த நாணயம் ஒன்றை சுத்தம் செய்து பார்த்ததில் நாணயத் தின் முன்புற மத்தியில் யானை ஒன்று துதிக்கையை உயர்த்தி வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் காலின் கீழ் இரண்டு கரைகளைக் கொண்ட ஆறு தெரிகிறது. ஆற்றில் இரண்டு மீன்களும் ஓர் ஆமையும் மிதக்கின்றன. இச்சின்னம் மிகத் தொன்மையான சின்னம். யானையின் மேல்புறம் தமிழ் பிராமி எழுத்து முறையில் செழியன் என்ற பெயர் தெரிகிறது. நாணயத்தில் இடப்பற்றாக்குறையால் ‘ய’ என்ற எழுத்து ‘ழி’ மற்றும் ‘ன்’ எழுத்துக்களுக்கு கீழ்புறம் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த எழுத்துக்களுக்கு அப்பால் வலப்புறம் 6 வளைவுகளைக் கொண்ட முகடு தெரிகிறது.

நாணயத்தின் பின்புறத்தில் மத்தியில் இரண்டு பெரிய மீன்கள் எதிர்நோக்கி நின்ற நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு மீன்களையும் சுற்றி இரண்டு வளைந்த எல்லைக் கோடுகள் தெரிகின்றன. இந்த எல்லைக் கோடுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக, முத்துக்களும் சிறு மீன் சின்னங்களும் கொண்ட மாலை போன்று பொறிக்கப்பட்டுள்ளது.

செம்பால் செய்யப்பட்டுள்ள, 1.8 X 1.7 செ.மீ அளவு கொண்ட இந்த நீள் சதுர நாணயம் 7.7 கிராம் எடையைக் கொண்டது.

மதுரை சங்க காலப் பாண்டியர் நாண யங்களில் பின்புறம் கோட்டு வடிவமுடைய மீன் சின்னம் இருக்கும். ஆனால், செழியன் என்று பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தில் அச்சின் னம் பயன்படுத்தப்பட வில்லை.

இந்த அரிய நாண யத்தின் பின்புறம் காணப்படும் இரண்டு மீன்கள் சின்னம், கொற்கை பாண்டியர்களின் தனி ஆட்சியை உறுதிப் படுத்துகிறது. இந்த நாணயத்தின் காலம் கி.மு.3-ம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

இதுவரை கிடைத்த நாணயங்களை வைத்துப் பார்க்கும்போது கொற்கை பாண்டியர்களுக்கு நின்று கொண்டிருக்கும் நிலையில் உள்ள இரண்டு மீன்கள், மதுரைப் பாண்டியர்களுக்கு கோட்டு வடிவ மீன் சின்னம், சேரர்களுக்கு வில் அம்பு சின்னம், சோழர்களுக்கு பாயும் புலி சின்னம் என்பது உறுதியாகிவிட்டது.

இவ்வாறு தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x