Published : 03 Apr 2015 10:32 AM
Last Updated : 03 Apr 2015 10:32 AM

அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்: கட்டிடத்தை இடிக்க தொழிலாளர்கள் வரவழைப்பு - புதுச்சேரி ஆட்சியர் சுந்தரவடிவேலு தகவல்

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பழனிராஜ உடையார் நகர் விரிவாக்கப்பகுதி உள்ளது. இப்பகுதியில் தில்லை கண்ணம்மா வீதி-தனராஜ் உடையார் வீதி சந்திப்பில் புதிதாக 4 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 9 வீடுகள் இக்குடியிருப்பில் உள்ளன. இக்கட்டிடத்தின் அனைத்து வீடுகளும் விற்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வீடு பிரபல திரைப்பட நடிகையின் தரப்பினர் வாங்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் மதியம் தரைத்தளத்தில் உள்ள தூண்களில் விரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் இரு தெருக்களில் 15 வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றினர். தெருவுக்குள் யாரும் வராமல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், நகரத் திட்டக்குழும அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்காலிகமாக அடுக்குமாடி கட்டிடத்தை தாங்கும் வகையில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. ஆட்சியர் சுந்தரவடிவேலு இப்பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து நகர அமைப்புக்குழுமத்தின் உறுப்பினர் செயலர் கந்தர் செல்வன் கட்டிடத்தின் நிலை மோசமாக உள்ளதால் அதை இடிக்கக்கூறி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் நேற்று காலை வரை எவ்வித நடவடிக்கையும் புதுச்சேரி அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்ய முற்பட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே ஆட்சியர் சுந்தரவடிவேலு கூறும்போது, கட்டிடத்தின் நிலை மோசமாக இருப்பதால் அதை இடிக்க முடிவு எடுத்துள்ளோம். ஹரியாணாவில் இதற்கான திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை அழைத்துள்ளோம். அவர்கள் வந்த பின்னர் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

நகர திட்டமைப்புக் குழுமத்தின் தலைவர் ரமேஷ் கூறும்போது:

ஆபத்து இருப்பதால் கட்டிடத்தை இடிப்பது உறுதி. அரசு கட்டுப்பாட்டின்கீழ் இக்கட்டிடம் வந்துள்ளது. தரைதளத்தில் போதிய தூண்கள் இல்லாததுதான் பிரச்சினைக்கு காரணம். இப்பகுதி ஆபத்தில் இருக்கிறது. பாதுகாப்பாக இடிக்க முடிவு எடுத்துள்ளோம். சென்னை, வடமாநிலத்தில் இருந்து தனிக்குழுக்கள் ஆய்வுக்கு வருகின்றன. அருகிலுள்ள மக்களின் பாதுகாப்பு கருதியே இப்பகுதி மக்களை வெளியேற்றியுள்ளோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x