Published : 20 Apr 2015 01:09 PM
Last Updated : 20 Apr 2015 01:09 PM

எங்கள் உயிர் பிரச்சனை நகைச்சுவையா?- சந்திரிகாவுக்கு ராமேசுவரம் மீனவர் பிரதிநிதி கண்டனம்

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று இலங்கை பிரதமர் ரணில் நகைச்சுவைக்காகவே தெரிவித்ததாக முன்னாள் அதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறிய கருத்துக்கு ராமேசுவரம் மீனவர் பிரதிநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, "இந்திய மீனவர்கள் 600-க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

2011-க்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீனவர்கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர். அவ்வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களே சுடப்பட்டிருக்கின்றனர். 2011-க்குப் பிறகு எவ்வித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது. அத்துமீறிவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில் நியாயமில்லை. ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந்திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது.

என் வீட்டுக்குள் யாராவது அத்துமீறி நுழையும்போது அவரை நான் சுட்டால் என் நாட்டின் சட்டதிட்டம் அதை ஏற்றுக்கொள்ளும். மீனவர் பிரச்சினைக்கும் இது பொருந்தும்" என கூறிய கருத்து தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3 அன்று கொழும்புவில் மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க வேண்டும் என்றும் கடற்படைக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க இலங்கைக் கடற்பரப்பினுள் அத்து மீறும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நகைச்சுவைக்காவே தெரிவித்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இது குறித்து ராமேசுவரம் மீனவர் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ கூறும்போது, "இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாத கருத்தினை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கைது செய்ய உத்திரவிட்டார். தற்போது இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ரணில் தமிழக மீனவர்களை சுடுவோம் என நகைச்சுவைக்காவே கூறியதாக சொல்லியுள்ளது வெந்த புண்ணில் வேல் குத்தியது போல் மீனவர்கள் உணருகிறோம். எங்கள் உயிர் பிரச்சனை நகைச்சுவையா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா என மூவர் கருத்திற்கும் உரிய முறையில் கண்டனத்தை இதுவரையிலும் தெரிவிக்காததால் இலங்கை அரசின் தொடர் அறிவிப்புகள் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி உள்ளது.

இப்பிரச்சினைக்கு இந்தியாவின் வலிமையான பிரதமர் என்று சொல்லப்படுகின்ற நரேந்திர மோடி, நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x