Published : 15 Apr 2015 08:51 PM
Last Updated : 15 Apr 2015 08:51 PM

‘சிறப்பான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளை விளம்பரப்படுத்துவோம்’: கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு

ஒரு கல்வி ஆண்டு முடிந்து, இன்னொரு கல்வி ஆண்டு தொடங்கும் நேரம் நெருங்கியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு பள்ளி, கல்லூரி, சீருடை, புத்தகம், நன்கொடை என்ற சொற்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். அதேபோல், அதிக கட்டண வசூல், அரசு நிர்ணயித்த கட்டணப் பட்டியலை வெளியிட மறுப்பு, 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க மறுப்பு என்ற செய்திகளும் வெளிவரும்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த வாரமே, புதிய கல்வி ஆண்டுக்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டன. மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு தலையிட்டதையடுத்து, தனியார் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு நிறுத்தப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரித்த அதிகாரிகள், அனைத்துப் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு, பள்ளிக் கல்வியில் உள்ள முறைகேடுகளை எதிர்த்து கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. அரசியல் கட்சியினரால் கல்விக்கும் பாடுபட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தக் கூட்டமைப்பு அரசியல் கட்சி நிர்வாகிகளின் சங்கமமாக உருவாகியுள்ளது.

அதிகமான மாணவர்கள்

இந்த அமைப்பு, கல்வி உரிமைக்காக குரல் கொடுப்பதுடன், கல்விக்காக அரசு அளிக்கும் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 2013-ம் ஆண்டு, 7 மாணவர்கள் கல்வி பெறுவதற்காக குரல் கொடுத்த சிலரே, இந்த அமைப்பின் முன்னோடிகள். 2014-ல் 50க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பாக உருவாகியது.

இந்தக் கூட்டமைப்பு, 2014-15 கல்வி ஆண்டில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளை அரசு நிர்ணயித்த கட்டணத்திலும், 25% இட ஒதுக்கீட்டிலும் தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளது.

விழிப்புணர்வை நோக்கி

இதுதொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான மகாலிங்கம், முஸ்தபா, மனோகரன், கோபால் ஆகியோர் கூறியதாவது: தனியார் பள்ளிகள் நடத்தக்கூடாது என்பது நோக்கமல்ல; அரசு விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டுமென்பதுதான் நோக்கம். அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமான கல்வி கிடைக்க வேண்டுமென நினைப்பவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், சிங்காரவேலர் கமிட்டி அறிவித்த கட்டண விவரம் குறித்து விழிப்புணர்வு இல்லை.

எனவே கிராமப்புறங்கள் அதிகமுள்ள பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் எங்களுக்கு பொருந்தாது என்றும், விண்ணப்பங்கள் இல்லை என்றும் சில தனியார் பள்ளிகள் கூறி வந்தன. எனவே, விண்ணப்பங்களை நாங்களே விநியோகித்ததுடன், எந்தப் பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் பெற்றோர்களுக்கு தெரிவித்தோம்.

இதுதவிர முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கட்டணமில்லா கட்டாயக் கல்வி நமது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம், தனியார் பள்ளிகளின் விதிமீறல்களை கண்டித்து ஏராளமான மனுக்கள், கல்வி அதிகாரிகளின் அலுவலகங்கள் முற்றுகை என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

விளம்பரப்படுத்துவோம்

இதுதொடர்பாக அரசு அதிகாரிகளே விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர் என்பது வருந்தத்தக்கது. வரும் கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு தனியார் பள்ளி முன்பும், அரசின் கட்டண விவரங்களை பெற்றோர்களுக்கு அச்சிட்டு கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல், தனியார் பள்ளிகள் மீதான மோகத்தை உடைத்தெறியும் வகையில், சிறப்பான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளை பாராட்டி, பிளக்ஸ் பேனர்கள் வைத்து விளம்பரப்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x