Published : 08 Apr 2015 04:04 PM
Last Updated : 08 Apr 2015 04:04 PM

ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான 20 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை அறிந்த தமிழக முதல்வர், ஆந்திர மாநில முதல்வருக்கு இது தொடர்பாக 07.04.2015 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில், இந்தச் சம்பவத்தில் இறந்த அனைவரும் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதற்காக நடத்தப்பட்ட நடவடிக்கையில் பலரும் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் ஒரு வேளை சட்டத்துக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, இவ்வளவு பேர்கள் இறந்திருப்பதைப் பார்க்கும்போது அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன்தான் நடந்ததா என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறியிருந்தார்.

அவர்கள் சட்ட விரோதமாக மரம் வெட்டுவதில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்களை சுட்டுக்கொல்லாமல் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்றும், இந்தச் சூழ்நிலையில் ஒரு விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடுமாறும், அப்பொழுதுதான் உண்மைநிலை அறியப்பட்டு, மனித உரிமை மீறியவர்களை பொறுப்பாக்க இயலும் என்றும், மனித

உரிமை மீறல் குற்றம் நடந்திருந்தால் இறப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மேலும் இறந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

20 பேர் உடல்களை கொண்டுவர ஏற்பாடு

இச்சம்பவத்தில் பலியான பெரும்பாலோர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாவட்டங்களின் மாவட்ட வருவாய் அலுவலர்களை அடங்கிய குழு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருப்பதிக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை உடனடியாக திரும்ப கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் இறந்தவர்களின் உடல்களை திரும்ப கொண்டு வர தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகளை எடுத்துச்செல்வார்கள். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றைத் திரும்ப கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களையும் திருப்பதி அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக திருப்பதியில் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக மஞ்சுநாதா, இ.கா.ப., காவல்துறை தலைவர் தலைமையில் காவலர் குழு ஒன்று திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் துயரமான சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர் ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x