Published : 15 Apr 2015 09:47 AM
Last Updated : 15 Apr 2015 09:47 AM
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், நேற்று அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்ததால் ஏரியின் நீர் இருப்பு அதிகரித்தது.
கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம், ஆந்திர அதிகாரிகளிடம் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் விளை வாக கடந்த 10-ம் தேதி கண்டலேறு அணையி லிருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது.
ஆரம்பத்தில் வினாடிக்கு 72.70 கனஅடியாக வந்துக் கொண்டிருந்த கிருஷ்ணா நதிநீரின் வரத்து படிப்படியாக உயர்ந்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, வினாடிக்கு 432.02 கன அடியாக இருந்தது. ஜீரோ பாயிண்டிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வரத் தொடங்கியது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ள ளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்று முன் தினம் 61 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. பூண்டி பகுதியில் 50.4 மி.மீ. மழை பெய்ததாலும், கிருஷ்ணா நதி நீர் வருகையாலும், பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 69 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. அதே நேரம், பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 10 கன அடி நீர், சென்னையின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT