Published : 24 Apr 2015 09:58 AM
Last Updated : 24 Apr 2015 09:58 AM

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் மே 2-ல் வழங்குவோம்: மாநில காங். தலைவர் இளங்கோவன் தகவல்

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வரும் மே 2-ம் தேதி ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த அவர் கூறியதாவது: திருநெல்வேலியில் வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பதும், பெருந்துறையில் தனியார் குளிர்பான நிறுவனம் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதும் காங் கிரஸுக்கு கிடைத்த வெற்றியாகும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி யமைக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே கூட்டணி குறித்து முடிவெடுப் போம். மோடி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இப்போது தேர்தல் நடந்தால் பாஜவுக்கு டெபாசிட்கூட கிடைக்காது. பிரதமர் மோடி 11 மாதங்களில் 12 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி சேரவும், தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் பாஜகவுக்கு ஆதரவாக ஜெயலலிதா செயல்படுகிறார்.

தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தி வருகிறது. வரும் மே 2-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அளிக்க உள்ளோம். தமிழக மீனவர்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x