Published : 14 Mar 2015 09:58 AM
Last Updated : 14 Mar 2015 09:58 AM

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விரைவில் ரெகுலர் படிப்புகள் அறிமுகம்

தொலைதூரக்கல்வி மற்றும் பகுதி நேரம் மூலமாக தற்போது பல்வேறு படிப்புகளை வழங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விரைவில் ரெகுலர் முறையில் பட்டமேற்படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் கடந்த 2002 முதல் செயல்பட்டு வருகிறது. கலை, அறிவியல், நிர்வாகம் சம்பந்தப்பட்ட பல்வேறு இளங்கலை, முதுகலை படிப்புகளையும், சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளையும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் வழங்கி வருகிறது.

மேலும், பகுதி நேர எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், விரைவில் ரெகுலர் முறையில் கலை அறிவியல் பாடங் களில் பட்டமேற்படிப்புகளை கொண்டுவர தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து பல் கலைக்கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பகுதி நேர எம்.ஃபில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளைத் தொடர்ந்து விரைவில் ரெகுலர் முறையில் முதுகலை படிப்புகளை தொடங்க உள்ளோம். இன்றைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப புதிய படிப்புகள் அமைந்திருக்கும். சிண்டிகேட் கூட்டத்தில் புதிய படிப்புகளுக்கு ஒப்புதல் பெறப்படும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) 12-பி அந்தஸ்து கிடைக்கப் பெற்றால்தான் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, ஆராய்ச்சி நிதி, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளின் நிதி உதவிகளைப் பெற முடியும்.

பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விரைவில் யுஜிசி 12-பி அந்தஸ்து கிடைத்துவிடும். மேலும், தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்.எட். (பொது) படிப்பு கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x