Published : 14 Mar 2015 09:47 AM
Last Updated : 14 Mar 2015 09:47 AM
எல்.ஐ.சி.நிறுவனம் ஜீவன் லக்ஷ்யா என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் ஜீவன் லக்ஷ்யா என்ற புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சித்தார்த்தன் கூறியதாவது:
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய பாலிசி ஒரு குறிப்பிட்ட காலம் பிரீமியம் செலுத்தி லாபத்தில் பங்கு கொள்ளக்கூடிய எண்டோவ்மென்ட் திட்டமாகும். இத்திட்டத்தில், 13 வயது முதல் 50 வயது பூர்த்தியானவர்கள் வரை சேரலாம். அதிகபட்ச முதிர்வு வயது 65 ஆகும். பாலிசியின் குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள். அதிகபட்ச பாலிசி காலம் 25 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படைக் காப்பீ்ட்டுத் தொகை ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.
பாலிசிதாரர் இடையில் இறந்தால் அவர் இறந்த நாளில் இருந்து ஒவ்வொரு பாலிசி ஆண்டின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பாலிசி முடியும் தேதியின் முந்தைய ஆண்டு வரை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் கடன் வழங்கப்படும். வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஐந்து லட்சம் ஜீவன் லக்ஷ்யா பாலிசிகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், எல்.ஐ.சி. தென்மண்டல வணிகப் பிரிவு மேலாளர் ரவிச்சந்திரன், மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனி கேஷன்) எஸ்.ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT