Published : 18 Mar 2015 09:46 AM
Last Updated : 18 Mar 2015 09:46 AM

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் 249 கைதிகள்

தமிழக சிறைகளில் 3 பெண்கள் உட்பட 249 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5-ம் தேதி பிளஸ் டூ தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். சென்னை புழல் சிறைச்சாலை மட்டுமே தேர்வு மையமாக உள்ளது. இதனால் வெவ்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் புழலுக்கு அழைத்து வரப்பட்டனர். மொத்தம் 44 கைதிகள் பிளஸ் டூ தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு நாளை(19-ம் தேதி) தொடங்குகிறது.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 3 பெண் கைதிகள் உட்பட 249 கைதிகள் எழுதுகிறார்கள். புழல் - 51, வேலூர் - 11, வேலூர் பெண்கள் சிறை - 3, திருச்சி - 26, மதுரை - 30, பாளையங்கோட்டை - 33, புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி - 10, புழல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி - 1, கடலூர் - 14, சேலம் - 20, கோவை - 50 என மொத்தம் 249 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

புழல், கோவை, மதுரை ஆகிய 3 மத்திய சிறைகள் தேர்வு எழுதும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. புழலில் 80 பேரும், கோவையில் 70 பேரும், மதுரையில் 99 பேரும் தேர்வு எழுதுகின்றனர். சிறைத்துறை இயக்கு நர் திரிபாதி உத்தரவின் பேரில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திராவிடர் கழகத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜேந் திரன், படித்த சிறைக்கைதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் கைதிகளுக்கு தொடர்ந்து பாடம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய 23 கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 110 பேரில் 96 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x