Published : 26 Mar 2015 08:48 AM
Last Updated : 26 Mar 2015 08:48 AM
சென்னை, மேற்கு அண்ணா நகரை சேர்ந்த வி.ரீனா என்ற மாணவியின் சார்பில் அவ ரது தந்தை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் என் மகள் படித்து பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதியுள்ளார். கடந்த 22-ம் தேதி, ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர், கணிதப் பாடத்துக்கான கேள்வித்தாளை செல்போனில் படம் பிடித்து அதை, ‘வாட்ஸ்-அப்’ மூலம் பலருக்கு அனுப்பியுள்ளதாகவும், பின்னர் வெளியில் உள்ள நபர்கள் சரியான பதிலை திரும்ப அனுப்ப, அதனைக் கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதிய தாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.
பிளஸ் டூ பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான தேர்வாகும். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும்.
தற்போது, ‘வாட்ஸ்-அப்’ மூலம் குறிப்பிட்ட பள்ளியில் மாண வர்களுக்கு விடை சொல்லிக் கொடுத்திருப்பதால், அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து விடுவார்கள். இதனால், நேர்மை யாக தேர்வு எழுதிய மாணவர் களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது அவசிய மாகிறது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகி யோருக்கு கடந்த 23-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே, பிளஸ் டூ பொதுத் தேர்வில், கணித பாடத்துக்கு மறு தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இத்தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையின் அடிப் படையில் கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று ஏன் இந்த நீதிமன்றம் உத்தர விடக் கூடாது? என்பதற்கு பதிலளிக்கும்படி அரசு வழக்கறி ஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT