Published : 10 Mar 2015 10:20 AM
Last Updated : 10 Mar 2015 10:20 AM
தேனியில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வேளாண்துறை உதவிப் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், பி.சி.பட்டியைச் சேர்ந்த வி.ரவிச்சந்திரன் (40). இவர் வேளாண் கருவிகள் விற்பனை செய்யும் டீலராக உள்ளார். இவர் அரசின் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் விற்றது தொடர்பாக ரூ. 3.45 லட்சத்தை பெற தேனி வேளாண்மை பொறியியல் துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த தொகைக்கான காசோலையை வழங்க, வேளாண் உதவிப் பொறியாளர் வி.ராதாகிருஷ்ணன் (46), ரவிச்சந்திரனிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முடிவில் ரூ. 20 ஆயிரம் தருவதென பேசி முடிக்கப்பட்டது.
ஆனால், லஞ்சம் தர விரும்பாத ரவிச்சந்திரன், தேனி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் அறிவுறுத்தியபடி, ரசாயன பவுடர் பூசப்பட்ட ரூ. 20 ஆயிரம் ரூபாய் தாள்களை உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம் ரவிச்சந்திரன் நேற்று வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ராதாகிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT