Published : 11 Mar 2015 09:19 AM
Last Updated : 11 Mar 2015 09:19 AM

‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்காததை எதிர்த்து வழக்கு: புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதி விநியோக உரிமையை நான் பெற்றுள்ளேன். தமிழில் பெயர் வைத்துள்ள மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்குவது என்று கடந்த 2007-ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இதன் அடிப்படையில், வரிச்சலுகைக்கு தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க மறுத்து விட்டது. ‘ஐ’ என்ற சொல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் பேச்சு வழக்கு சொல்லாகும். இந்தியாவில் எந்த ஒரு மொழி யிலும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த ‘ஐ’ என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது.

இப்படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க முடியாது என்று புதுச்சேரி மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து ‘ஐ’ படத்துக்கு வரிச் சலுகை வழங்க புதுச்சேரி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x