Published : 11 Mar 2015 06:06 PM
Last Updated : 11 Mar 2015 06:06 PM
பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் டாமிஃப்ளூ மாத்திரைகள் போதிய அளவு கையிருப்பு உள்ளது. தனியார் மருத்துவ மனைகளுக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சலை தடுக்கும் டாமிப்ளூ மாத்திரைகளின் கையிருப்பு நிலவரம் குறித்து சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைப்பணிகள் கழகக் கிடங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை அமைச்சர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். ''தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6.75 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.
பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆய்வகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பன்றிக்காய்ச்சலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 2 ஆய்வகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க அந்த ஆய்வகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வகங்கள் அதே தவறை மீண்டும் செய்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT