Published : 16 Mar 2015 09:13 AM
Last Updated : 16 Mar 2015 09:13 AM

விசைப்படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை பயணம்

இலங்கையில் உள்ள தங்களது விசைப்படகுகளை மீட்பதற்காக தமிழக மீனவர்கள் 145 பேர் 20 படகுகளில் நேற்று இலங்கை சென்றனர்.

இலங்கை கடற்படையினர் கடந்த ஜுன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழக மீனவர்களின் 87 படகுகளை சிறைபிடித்துள்ளனர். 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

இப்படகுகள் இலங்கையில் மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய மாவட்டங்களின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்பின்றி இருந்ததால் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், இலங்கையில் புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்றதும் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து படகுகளை சரிசெய்து கொண்டு வருவதற்காக ராமேசுவரம், மண்டபம், ஜெகதாப்பட்டினம், நாகை, காரைக்கால் ஆகிய இடங்களில் இருந்து 145 மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறையினர் கொண்ட குழுவினர் 20 படகுகளில் நேற்று இலங்கை சென்றனர். இவர்கள் தங்கள் படகுகளுடன் புதன்கிழமை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x