Published : 22 Mar 2015 01:25 PM
Last Updated : 22 Mar 2015 01:25 PM
தங்கள் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தாக குற்றம்சாட்டி, மன்னார் மற்றும் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 54 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மன்னார் கடற்பரப்பில் சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 33 பேரையும், அவர்களின் 5 விசைப்படகுகளும், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும், 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் தனித்தனியாக சிறைப்பிடித்தனர்.
மன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை தலைமன்னாரிலும், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யபட்ட மீனவர்கள் யாழ்பாணம் காங்கேசன் துறை காவல்துறையினரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் நீதிமன்றங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சூழலில், தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேனா பதவியேற்ற பின்னர், இது இரண்டாவது மீனவர் சிறைப்பிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT