Published : 13 Mar 2015 08:50 AM
Last Updated : 13 Mar 2015 08:50 AM
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதையடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அது குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் பல்வேறு கட்டங்களாக நீதிபதி ரகுபதி ஆய்வு நடத்தினார். கமிஷன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி மனு தாக்கல் செய்தார். விசாரணையின்போது, இவ்வழக்கு முடியும் வரை புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக விசாரணை எதையும் கமிஷன் மேற்கொள்ளாது என்று நீதிபதி ரகுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது. அதற்காக புதிய தலைமைச் செயலகம் முறைகேடு தொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்க முடியாது என்றும், விசாரணையை மீண்டும் தொடங்கப் போவதாகவும் நீதிபதி ரகுபதி தெரிவித்தார். இதையடுத்து, கேள்விப் பட்டியலை தயாரித்து அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 17-ம் தேதி கருணாநிதிக்கு அனுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை கமிஷன் சார்பில் அளித்த உறுதிமொழியை மீறி, விசாரணை நடவடிக்கை தொடங்கப் பட்டுள்ளது.
விசாரணை பாரபட்ச மாகவும், உள்நோக்கத்துடனும் நடப்பதால் இந்த கமிஷனின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. கருணாநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார்.
மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், புதிய தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். கருணாநிதியின் மனுவுக்கு நீதிபதி ரகுபதி கமிஷன் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT