Published : 23 Mar 2015 10:28 AM
Last Updated : 23 Mar 2015 10:28 AM
சென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பான பாதுகாப்பு ஆணையரக ஆய்வுப் பணிகள் ஒரு வாரத்துக் குள் நிறைவடையும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள்
2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மொத்தம் 42 ரயில்கள் தேவைப்படுகின்றன. இதுவரையில் 22 ரயில்கள் வந் தடைந்துள்ளன. மாதந்தோறும் 2 அல்லது 3 மெட்ரோ ரயில்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பல்வேறு சோதனைப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையரக ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட வுள்ளன. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
2.5 நிமிடங்களுக்கு ஒன்று
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் புதுமையானவை என்பதாலும் முதல்முறை என்பதாலும் ஆய்வுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த சோதனைகளுக்கு அதிக காலம் தேவைப்படாது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையரக ஆய்வுப் பணிகள் நிறைவடையும் என நம்புகிறோம். மெட்ரோ ரயில் கட்டண நிர்ணயம், ரயில் சேவை தொடங்கும் தேதி ஆகியவற்றை மாநில அரசுதான் அறிவிக்கும்.
கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மொத்தம் 10 ரயில்களை இயக்கவுள்ளோம். ரயில் பெட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன வசதிகள் மற்றும் பாதுகாப்புடன் உருவாக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் என ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும். கோயம்பேடு – ஆலந்தூர் பயண நேரம் மொத்தம் 20 - 23 நிமிடங்களாக இருக்கும்.
ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். பின்னர், தேவைக்கு ஏற்றவாறு இடைவெளி குறைக்கப்படும். அதிகபட்சமாக 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்க முடியும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சுமார் 10 நொடிகள் வரை ரயில்கள் நின்று செல்லும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT