Published : 30 Mar 2015 10:15 AM
Last Updated : 30 Mar 2015 10:15 AM

‘டிஸ்லெக்சியா’ குறித்து மருத்துவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும்: குழந்தை நல நிபுணர் வலியுறுத்தல்

‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் திறன் குறைபாட்டைப் பற்றி குழந்தை நல மருத்துவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் அகாடெமியின் தலைவர் முத்துசாமி கூறியுள்ளார்.

குழந்தை நல மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மெட்ராஸ் டிஸ்லெக்சியா அமைப்பு சென்னையில் நேற்று நடத்தியது. இதில் சிறப்புரையாற்றிய மெட்ராஸ் டிஸ்லெக்சியா அமைப்பைச் சேர்ந்த ஹரினி மோகன், “கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் சிக்கல்கள் இருக்கும். இதனால் அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவார்கள். அவர்களை சரியாக கண்டறிந்து சிறப்பு வழி கற்றல் மூலம் பயிற்றுவிக்க வேண்டும்” என்றார்.

இந்திய குழந்தை நல மருத்துவர்கள் அகாடெமியின் சென்னை பிரிவு தலைவர் டாக்டர் டி.முத்துசாமி பேசும்போது, “30 ஆண்டுகளுக்கு முன் குழந்தை நல மருத்துவராக பயிற்சி பெறும் போது டிஸ்லெக்சியா என்ற வார்த்தையை கூட கேட்டதில்லை. ஆனால், இன்று அது பற்றிய விழிப்புணர்வு மருத்துவர்கள் மத்தியில் அதிகம் தேவைப்படுகிறது. வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறுபவர்களை ‘மக்கு’ என்று ஒதுக்கி விடக் கூடாது. அதிக புத்திக்கூர்மை (IQ) இருந்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அந்த மாணவரிடம் என்ன பிரச்னை என்று ஆராய வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காக்னிசென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் லக்‌ஷ்மி நாராயணன், குழந்தை நல மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x