Published : 16 Mar 2015 07:14 PM
Last Updated : 16 Mar 2015 07:14 PM
படகுகள் இன்றி இலங்கையிலிருந்து தாயகம் திரும்ப திரிகோணமலை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 26 அன்று கச்சத்தீவு மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 10 விசைப்படகுளில் இருந்த 86 மீனவர்களை தனித்தனியாக சிறைப்பிடித்து யாழ்பாணம் சிறையில் 43 பேரையும், திரிகோணமலை சிறையில் 43 பேரையும் மார்ச் 13 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 86 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை மற்றும் திரிகோணமலை நீதிமன்றங்கள் கடந்த வெள்ளிக்கிழமை உத்திரவிட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட 10 படகுகளும் விடுதலை செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட 43 மீனவர்கள் மட்டும் சனிக்கிழமை நாகைப்பட்டிணம் துறைமுகத்திற்கு படகுகள் இன்றி திரும்பினர். திரிகோணமலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 43 மீனவர்கள் திங்கட்கிழமை தாயகம் திரும்புவதாக இருந்தது.
ஆனால் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் தங்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டது போன்று தமிழக மீனவர்களுடன் அவர்களின் படகுகளையும் விடுவித்தால் மட்டுமே இலங்கையிலிருந்து தாயகம் திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது 43 தமிழக மீனவர்களும் யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT